REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
R.Sasikala Ramnatarajan - India
Entry No:
190
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காத்திருக்கிறேன்...
நீ வரும் வரை
உனக்கான நினைவுகளுடன்
காத்திருக்கிறேன்...
உனக்கான என் நேசம்
காற்றோடு குமிழ்கள்
கலப்பது போல்
ஒன்றாக கலந்து
இப்பிரபஞ்சமே சுற்றிவர...
காத்திருக்கிறேன்...
உனை நேரில் காணும்
அத்தருணத்தில்
நீ விட்டுச்சென்ற காதலை
பத்திரமாக பாதுகாத்து
உன் கையில் சேர்க்க...
காத்திருக்கிறேன்...
நான் இழந்த
என் வெட்கத்தை
உன்னிடமிருந்து மீட்டெடுக்க...
இறுதியாக
காத்திருக்கிறேன்..
உன்னோடுடனான
என் பெருவாழ்வை
இழந்துவிட்டதைக் கூறி
உள் தோள் சாய..
நிச்சயமாக வந்துவிடு..
நீ விட்டுச்சென்ற இடத்திலேயே
காத்திருக்கிறேன்
உனக்காக...
உன் இருப்பை உணர்த்த வா..
நீ இல்லா பொழுதுகளில்
உன் இருப்பை உணர்த்தும்
உன் குளியல் சோப்பின்
வாசனை போதும்....
உன் பெர்பியூமின்
நறுமணம் போதும்....
நீ உடுத்திய உடை கூட போதும்...
உனக்கு பிடித்த பாடல் போதும்...
உன் வெட்கச்சிரிப்பின் மிச்சம் போதும்..
உன் குறுஞ்செய்தியின் முத்தம் போதும்...
யாவற்றையும் விட
என்றோ மீறிய உன் நகக்கீறல்
என்னுள் போதுமே போதும்....
என் தீராத காதலை...
தீர்ந்துபோகாமல் வைத்திருக்க...
ஆனால்,
உன் இருப்பை இருந்தே
உணர்த்த வா...
Entry No:
188
தமிழ் கதை (Tamil Kadhai)
காதல் எப்போதுமே, தன்ன அழகா காட்டிக்க ஆசைப்படும் உண்மைதான.? ஆனா இந்த கல்யாணம் ஆன கொஞ்சநாள்ல, இந்த அழகுபடறபாடு இருக்கே ரொம்ப பாவம். இப்படியும் இல்லாம, அப்படியும் இல்லாம கஷ்டம். குழந்தைப்பேற்றுக்கு பிறகான காதல்ல, அழகு எங்க ஒளிஞ்சு போகுதுனே தெரியாது.
கல்யாணம் பண்ணின கொஞ்ச நாள்ல.. அவருக்கு முன்னையே எழுந்திருப்போம். ஏன்னா??? சீக்கிரம் பல்ல விளக்கணும், குளிக்கலனாக்கூட பரவாயில்ல மூஞ்சியாவது கழுவியிருப்போம். இதே கொஞ்சம் முன்னாடி போனீங்கனா.. இந்த பருவக்காதல் வரும். அப்போலாம் குளிச்சுமுடிச்சு மேக்கப்ப போட்டாதான் வீடியோகால்லே அட்டெண்ட் பண்றது. கண்மை என்ன? த்ரெட்டிங் என்ன?? ஆஹா ஓஹோனு ஜில்லுனு திரிஞ்ச காலம் அது. இப்ப கல்யாணம் முடிஞ்ச பின்னாடி வருவோம்.
சாப்பாடெல்லாம் அளவா, அழகா சாப்டறது, அதுக்குமுன்ன அண்டாசட்டில கூட சோறு திம்போம். தும்முறதுல இருமுறதுல நேக்கு, கைக்குட்டை இல்லாம வெளில கிளம்பறது இல்ல. அத எதுக்கு வச்சிருக்கோம் நினப்புக்கூட இல்லாம இருக்கது. ஆத்துக்காரர் முன்ன பதுவுசு. பூ வைக்காம வெளியக்கிளம்புறது இல்ல. ஒரு தியேட்டர் விடாம படம் பார்க்கறது. நிஜமாவே கல்யாணம் ஆன புதிதுல வீடே தங்கமாட்டோம், சுத்திக்கிட்டே இருப்போம். பார்த்த படத்தையே பத்து தடவைக்கு மேல பார்ப்போம். அதிகமா வெளிலதான் சாப்பிடுவோம். ரயில்வே ஸ்டேசன்ல, சும்மா ப்ளாட்பார்ம் டிக்கெட் எடுத்துட்டு உட்கார்ந்து, போற வர ரயிலுக்கு டாட்டா காட்டிட்டு இருப்போம். பேசி பேசி வாய் வலிச்சுப்போய் ஜுஸ்ஸா குடிச்சு எனர்ஜி ஏத்தறது என்ன?? ஷாப்பிங் போலாம் வானு, காச கரியாக்கி குமிச்சதென்ன??? அதெல்லாம் இந்த கிளர்ச்சிக் காதல் பண்ற வேலை தான், சும்மா இருக்கவேவிடாது. மாமியார்ட திட்டு வாங்க வச்சிட்டே இருக்கும்.
நமக்கு புதுசா ஒரு பொருள் கிடைச்சா, அத கீழவைக்காம எப்படி கொண்டாடுவோம் சின்ன வயசுல, அதேமாதிரி. ஒரு நிமிசம் கூட பிரியறது இல்ல. என் மாமியார் சொல்வாங்க, "எப்ப பார்த்தாலும் அந்த கைய விடாம இறுக்கி பிடிச்சுக்கறா பாரு", அவங்க புள்ளையோட கைய மட்டும் இல்ல, அவரையே நான் தாங்கிப்பிடிக்க தயாரா இருக்கேன்னு தெரியல அவங்களுக்கு. பெருமைப்பட வேண்டிய விசயத்துக்கு, பொறாமை படுவாங்க. கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் வரைக்கும் "மாமா" தான்.. அய்யோ! சொல்லும்போதே இப்ப வெட்கம் என்ன திங்குது.
இப்படியெல்லாம் இருந்த கிளர்ச்சிக்காதல், அப்படியே படிபடியா குறைய ஆரம்பிச்சது. அதாவது காதல் குறையல, அந்த கிளர்ச்சிலாம் அடங்கிப்போனது. அது எப்டினு சொல்லவா? எனக்கு சைனஸ் பிரச்சனை இருக்கதால சில நைட்ல, குறட்டைமாடு மாதிரி உறிஞ்சிட்டே கிடப்பேன். "என்னாடி இப்படி சத்தம் குடுக்கற?? அது அப்டித்தான் பேசாம தூங்கு" வெட்கமெல்லாம் விட்டுப்போச்சா..!!
அதேமாறி ஒவ்வொண்ணா சாயம் வெளுக்க ஆரம்பிச்சது. கழுவாத மூஞ்சி, அழுக்குநைட்டி, வாராத முடினு. ஆனாலும் குறையாத காதல், பழகிடுச்சு. "குளிக்காமலும் அழகா இருக்கியே எப்படினு ஒரு முத்தம்". "இந்த நைட்டி உனக்கு சூப்பரா இருக்கேனு ஒரு முத்தம்". "பல்லு விளக்காம தூங்கும் போதும் ஒரு முத்தம்"னு கிளர்ச்சிகள் இல்லாத காதல் தொடங்கியாச்சு.
கிளர்ச்சிகள் அடங்குறது குழந்தைகள் வந்தபிறகு தொடங்கிரும். உருவ அமைப்பு மாறி, இனி உன்ன என்னால அதிகமா கவனிக்க முடியாது பிள்ளைதான் முக்கியம்கற நிலமை வரும்போதும், நான் இருக்கேன் உனக்கு, நாம பாத்துக்கலாம்னு நம்மளோட பாதியா வந்து நிக்கும் பாருங்க. அந்த காதல்தான் வயசாகி குச்சி ஊன்ற வரைக்கும் நம்மள தாங்கிப்பிடிக்கற காதலா இருக்கும்.
வெட்கப்பட அவசியம் இல்ல, கிளர்ச்சி போயிருச்சு, ஆனா காதல் இன்னும் இன்னும் அதிகமா இருக்கே..