REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Murugan N - India
Entry No:
343
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
கொரோனா (GO ✈ RUN ✈ AA)
*************************************
சீனாவின் வூகானில்
சீரும் சிறப்புமாய்
பிறந்த நீயோ
சிட்டாகப் பறந்து
சீர்குலைத்தாய்
மனிதகுலத்தை...
கண்டம்விட்டு கண்டம் பாயும்
ஏவுகணை போலன்றி
கலியுக மக்களைத்தான்
கதிகலங்க வைத்தாயே !
கூட்டமே உனக்கு
ஆதாரம் ஆனதால்
உலகமே உனது
கூடாரம் ஆயிற்று
மனித குலத்திற்கோ
சேதாரம் ஆயிற்று
ஆயினும்,
கொரோனாவே உமக்கு
கோடி நன்றிகள்
கூறுகிறேன் நான்...
உலகமே எனைக்கண்டு
உள்ளம் நடுங்கி
உள்ளிருப்புக் கொண்டிருக்கையில்
எனக்கெதற்கு இயம்புகிறாய்
இவ்வளவு நன்றிகள்
என்றென்னைக் கேட்கிறாயா?
சொல்கிறேன் கேள்….
பறவை விலங்குகளுக்கு
எள்ளளவும் நீ
பாதிப்பை ஏற்படுத்தவில்லை
பறவைகள் சுதந்திரமாக
பறந்து திரிகின்றன !
விலங்குகள் பயமின்றி
வெளியே வருகின்றன !
மனித நடமாட்டம்
இல்லாத காரணத்தால்
காடுகளில் விலங்கினங்கள்
களியாட்டம் கொண்டு
சாலைகளில்
வீதியுலா வருகின்றன...
கொரோனாவே !
உன்னால் இன்று
ஊரடங்கு உருமாறி
உலகடங்கு ஆனதால்
சாலையில் விபத்துகள்
சிறிதும் இல்லை !
காற்று மாசுபாடு
கடுகளவும் இல்லை !
வழிப்பறி கொள்ளைக்கு
வழியேதும் இல்லை !
நீயோ
செல்லும் இடங்களில்
சீராக வளர்கிறாய்
வளர்பிறையாய்...
ஏனெனில்
நீயொரு தொற்றுநோயாம்
தொற்றுவதற்கு வழியின்றி
நாங்கள் தனித்திருந்தால்
நீ எப்படி
பற்றிப் படருவாய்?
உன்னை அடியோடு
கொல்லும் மருந்தைக்
காணாமல் தவிக்கிறோம் !
ஆனாலும் நாங்கள்
தனிமை தவமிருந்து
வெல்வோம் உன்னை
விரட்டுவோம் விரைவில்...!
கொரோனா என்பது
கொள்ளை நோயாம்
இருக்கட்டுமே
இதுவொன்றும்
எம்மினத்திற்குப் புதிதல்ல
எத்தனையோ நோய்களை
எதிர்கொண்டது எம்மினம்
மலேரியா வந்ததாம்
மலையேறி விட்டது
காலரா வந்ததாம்
காணாமல் போனது
பிளேக் வந்ததாம்
பின்வாங்கி ஓடியது
சார்ஸ் வந்ததாம்
சத்தமின்றி மறைந்தது
கொரோனாவே
நீ மட்டும் இதற்கு
விதிவிலக்கா என்ன?
என் கொள்ளுபேரன் கூறுவான்
கொரோனா என்னும்
கொள்ளை நோய்
என் பாட்டன் காலத்தில்
வந்ததாமென்று....
தகடூர் தமிழ்முருகன்